10

மாலை 07.30 மணி.  கோட்டையை  சுற்றி இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன.  எங்கள் குழுவில் உள்ள பதினான்கு பேர் தவிர இன்னுமொரு இருபது பேர் கூட்டத்தில் இருந்தார்கள்.  படிக்கட்டுகளில் எங்களுக்கென விரிக்கப்பட்டிருந்த நீளமான பாய்களில் அமர்ந்திருந்தோம்.

நிசப்தமான அந்த வெளியில், ஒலியும் ஒளியும் ஆரம்பிக்கப்பட்டு கோபாச[cha]ல் என்கிற சூத்ரதாரி மூலம் கதை சொல்லப்படுகிறது.  அந்த சூத்திரதாரியின் குரலாய் ஒலிப்பது அமிதாப் பச்சன் அவர்களின் கம்பீரமான குரல்.

அவரது குரலில், ஆங்காங்கே எரியும் விளக்குகளில் இக்கோட்டையில் நடந்த நிகழ்வுகள் பலவும் உயிரூட்டம் பெற்று, நம் கண்முன்னே நடந்தேறுவது போல  விரிகிறது. பார்க்கும் எல்லோரையும்  குவாலியர் நகரம் தோன்றிய காலத்திற்கு  அழைத்துச் செல்கிறது இக்காட்சி.

ராஜ்புத் அரசர் சூரஜ் சென் வேட்டைக்குப் புறப்பட்டு வழி தவறி தனியாய் மலைகள் சூழ்ந்த காட்டுக்குள் வருகிறார்.  அவருக்கு தொண்டை வறண்டு, ஒரு துளி தண்ணீர் கிடைத்தால் கூட தனது ராஜ்ஜியத்தையே எழுதி வைக்கும் அளவுக்கு தண்ணீர் தாகம்! அப்படி தாகத்துடன் வந்து கொண்டு இருக்கும்போது, யாருமே இல்லாத அக்காட்டில் அவர் சந்திப்பது ”குவாலிபா” என்கிற முனி ஸ்ரேஷ்டரை.

தன்னுடைய தண்ணீர் தாகத்தினைச் சொல்லி தண்ணீர் கிடைக்குமா எனக்கேட்ட மன்னர் சூரஜ் சென் அவர்களுக்கு முனிவர் வழி நடத்திச் சென்று காண்பித்தது ஒரு குளம். குளத்தில் இறங்கி தாகம் தீர அவர் குடித்தது குளிர்ந்த, சுவை மிகுந்த, மருத்துவ குணம் நிறைந்த நீர்.  என்ன ஆச்சரியம்…  அவருக்கு நீண்ட நாட்களாய் இருந்த தொழுநோய் நீங்கியதாம் அந்தத் தண்ணீரை அருந்தியவுடன்.

நன்றிக்கடன் செலுத்த விரும்பிய மஹாராஜா, முனிவரின் விருப்பத்திற்கிணங்க, அங்கேயே ஒரு பெரிய குளம் கட்டி, பக்கத்திலேயே கோட்டையையும் கட்டி, அந்த நகரத்தின் பெயரையும் முனிவரின் பெயரை மூலமாகக் கொண்டு குவாலியர் என்று வைத்தாராம். இக் கோட்டையைச் சுற்றி நிறைய மாளிகைகளும், கோவில்களும் கட்டி இருக்கின்றனர் ராஜ்புத் அரசர்கள்.

இப்படி இருந்த சந்தோஷமான வாழ்க்கையில் தீங்கு வந்தது துருக்கிய படையெடுப்பின் மூலம். அதன் பிறகு முகம்மது கஜினி மற்றும் மற்ற முகலாய ராஜாக்களின் படையெடுப்புகள் பற்றி அவ்வளவு அழகாய் இந்த ஒலி-ஒளிக்காட்சியில் காண்பித்தார்கள்.  அதிலும் முக்கியமாய் ஒரு காட்சி.

“முகலாய மன்னர்கள் ராஜ்புத் மன்னர் மீது படையெடுக்க, அவர்கள் தோற்கும் நிலையில் மன்னரின் மனைவிகள், அரண்மணையில் இருந்த பெண்கள் அனைவரும் “ஜௌஹர்” என்ற அரண்மணையின் பகுதியில் ஒரு பெரிய நெருப்பு வளர்த்து அதனுள் பாய்ந்து தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்ட” நிகழ்ச்சி பற்றிய காட்சிகளை ஒலியும், ஒளியும் கொண்டு நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.   மாண்ட பெண்களின் அழுகுரல்கள், கேட்கும் எல்லோரையும் வருத்தியது உண்மை.

தோல்வி ஏற்பட்டாலும் சில காலத்திற்குப் பின் தோமர்கள் இக்கோட்டையில் கோலோச்சுகிறார்கள்.  தோமர்கள் காலத்தில் தான் குவாலியர் சிறந்து எல்லா இடங்களிலும் தன்னுடைய புகழைப் பரப்பிக் கொண்டு இருந்ததாம்.  தோமர்களில் மிகவும் புகழ் பெற்ற ராஜா மான்சிங் காலத்தில் நடந்த சில இனிமையான நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த ஒலி-ஒளி காட்சியில் 10 நிமிடத்திற்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள்.

அக் கதையில் ராஜா மான்சிங் காதல் கதையும் வருகிறது.  காதல் நம் எல்லோருக்குமே பிடித்தது தானே.  அக்காதலும் மற்ற சுவையான விஷயங்களும் அடுத்த பகுதியில்… அதுவரை நீங்கள் காதலித்துக் கொண்டு இருங்கள், கல்யாணம் ஆனவர்கள் எனில் தத்தமது கணவன்/மனைவியை. ”கல்யாணம் ஆகாதவர்கள்?” எனக் கேட்பவர்களுக்கு, வரப் போகும் வாழ்க்கைத் துணை பற்றிய கனவில் இருங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book