27

பத்து மணி அளவில் ஓர்ச்சாவிலிருந்து கிளம்பிய நாங்கள் 12 மணிக்கு ஜான்சி வந்தடைந்தோம்.  எங்களுடைய இந்த கல்விச் சுற்றுலாவில் முக்கியமான பகுதியாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒன்று.  முன்பே இரு பகுதிகளில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தொழிற்சாலை சென்றது பற்றியும் எழுதியிருக்கிறேன்.

இப்போது நாங்கள் சென்றது ஜான்சி நகரத்தில் இருக்கும் அரசு தொழிற்சாலையான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-இன் ஒரு யூனிட்டிற்கு.  இந்த யூனிட்-இல் அவர்கள் தயாரிப்பது ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள்.

 

இஞ்சின்களின் சக்கரங்கள் செய்வது முதல் ஒவ்வொரு பகுதியும் எப்படிச் செய்கிறார்கள், எப்படி இணைக்கிறார்கள், தரத்தினை எப்படிச் சோதிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுடன் ஒவ்வொரு பகுதியாய் வந்து எங்களுக்குப் புரியும் பாஷையில் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு பொறியியலாளர்.

இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் இஞ்சின்களை அவர்களது சொந்த தொழிற்சாலைகளிலேயே தயாரித்துக் கொள்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கும் இஞ்சின்கள் தயாரிக்க ஆர்டர்கள் தருகிறார்கள்.  இந்த தொழிற்சாலையில் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.  ஒவ்வொரு இடமும் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தது.

அங்கிருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம்.  நாங்கள் அடுத்ததாய் சென்றது ஜான்சி நகரத்தில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்திற்கு.  1956-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த தேவலாயத்திற்கு எல்லோரும் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம்.

ஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.  நாங்கள் தில்லி செல்ல போபால்-தில்லி ஷதாப்தியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.  அருமையான பயணச் சுற்றுலாவினை முடித்த திருப்தியில் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம்.

என் பக்கத்தில் வந்து அமர்ந்தது ஒரு வட கொரியா நாட்டினைச் சேர்ந்த ஒரு ஆசிரியர்.  ஜான்சியிலிருந்து அவர் செல்லும் ஆக்ரா வரை என்னுடன் பேசியபடி வந்தார்.  இந்திய உணவு வகைகள், படிப்பதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்ட தளங்களில் பயணித்தது எங்கள் பேச்சு.

தன்னுடைய தாய்க்கு இந்தியாவைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறாராம்.  கொரிய பாஷையில் சில வார்த்தைகளை எழுதிக் காட்டினார்.  ஒன்றுமே புரியவில்லை.  சீன பாஷை போன்றே இவர்களும் எழுதுகிறேன் என்று படம் வரைகிறார்கள்….  இரண்டு-மூன்று மணி நேர பயணத்திற்குள் இப்படி வரையக் கற்றுக்கொள்வது கடினம் என்பதால் மேலே செல்லவில்லை….  J

இரவு பத்தரை மணிக்கு புது தில்லி ரயில் நிலையம் வந்தடைந்தோம்.  எல்லோரும் அவரவர் இலக்கினை நோக்கி பயணம் செய்யும் முன் பரஸ்பர இரவு வணக்கங்களும் சொல்லிக்கொண்டோம்.  அடுத்த நாள் மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்” என வீடு திரும்பினேன்.

இப்படியாக இந்த நான்கு நாள் பயணத்தில் நான் சந்தித்த, சிந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணக் குறிப்புகள் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

நான்கு நாட்கள் சென்றதை இருபத்தி ஏழு பகுதிகளாய் பிரித்து எழுதி இருக்கிறேன்.  பார்த்த அனைத்தையும் எழுத முயன்றாலும், நினைவில் இல்லாத சிலவற்றை விட்டுவிட்டேன்.

என்னுடன் இந்தப் பயணத் தொடரில் கூடவே பயணம் செய்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book